Saturday, July 20, 2013

தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது


உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா வரும் 26ம் தேதி தொடங்கி ஆக.5ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவிற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, பேராலய பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:  தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமன்றி கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

இந்நிலையில் 431-வது ஆண்டு திருவிழா மற்றும் பேராலயம் எழுப்பப்பட்டு 300வது ஆண்டு நிறைவு விழா கொண்டடப்படுகிறது. இதையொட்டி தங்கத் தேர் திருவிழா நடைபெறுகிறது. திருவிழா வரும் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 7.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. தொடர்ந்து 8.30மணிக்கு கொடியேற்றமும் நடைபெறும். 

அன்று மதியம் 12 மணிக்கு அன்னைக்கு பொன் மகுடம் சூட்டப்படுகிறது. முன்னதாக 25ம் தேதி மாலை கொடி பவனி நடைபெறுகிறது. 3ம் திருவிழாவான 28ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 7.30 மணிக்கு ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் புதுநன்மை, கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. இரவு நற்கருணை பவனி நடக்கிறது. ஆகஸ்ட் 4-ம் அன்று இரவு 7மணிக்கு ஆயர் பெருவிழா மாலை ஆராதாணை நடக்கிறது. அன்பின் இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது.

அன்று இரவு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ திருப்பவனி நடக்கிறது. திருவிழாவி்ன முக்கிய நிகழ்வான ஆகஸ்ட் 5ம் தேதி திங்கட்கிழமை அன்னையின் பெருவிழாவான அன்று காலை 4.30 மணிக்கு முதல் திருப்பலியும், 5.12மணிக்கு 2ம் திருப்பலியும், 7.30 மணிக்கு ஆயர் தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலியும் நடக்கிறது. 

காலை 7 மணிக்கு ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில், மதுரை பேராயர் பீட்டர் பர்னான்டோ தேங்கத் தேர் பவனியை அர்ச்சித்து தொடங்கி வைக்கிறார். கோட்டாறு ஆயர் பீட்டர் ரெம்ஜியூஸ், சிவகங்கை ஆயர் சூசை மானிக்கம் ஆகியோர் மறையுரை நிகழ்த்துகின்றனர். பகல் 12 மணிக்கு திருச்சி மறைமாவட்ட ஆயர் அந்தோனி டிவோட்டா தலைமையில் சிறப்பு நன்றி திருப்பலி நடக்கிறது. 

15வது தங்கத் தேரோட்டம் 

பனிமய மாதா தங்கத் தேர் திருவிழா வரும் 26ம் தேதி தொடங்கி ஆக.5ம் தேதி வரை நடைபெறுகிறது. தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம் எழுப்பப்பட்டு 300வது ஆண்டு நிறைவையொட்டி தங்கத் தேரோட்டம் நடைபெறுகிறது. சமூக, சமய நல்லினக்க திருவிழாக இந்த திருவிழா நடைபெறும். இது ஆலயத்தின் 15வது தங்கத் தேரோட்டம் ஆகும். ஆலயத்தில் வீற்றிருக்கும் மாதாவே தேர்ப்பனியாக வ்நது ஆசி வழங்குகிறார். 

தங்கத் தேர் திருவிழாவிற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை விடுக்கபட்டுள்ளளது. தங்கத்தேர் 53 அடி உயரம் கொண்டது. இதில், மாதா உருவம் மற்றும் புனித நிலைக்கு உயர்த்தப்பட்டவர்களின் உருவங்களும் இடம்பெற்றிருக்கும். இதில், முத்து, பவளம், தங்கம் போன்றவற்றால் தேர் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அன்னையின் அருள் பெறுவதற்கு அனைவரும் அமைதியாகவும், பக்தி பூர்வமாகவும் திருவிழா நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறேன். 

திருவிழாவில் நகரில் உள்ள அனைத்து மண்ணின் மைந்தர்கள், குருக்கள், துறவியர், அருட்சகோதர, சகோதரிகள் கலந்துகொள்கிறார்கள். இந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகளை எனது தலைமையில் உதவி தந்தையர்கள் ஆக்னஸ் அமல்ராஜ், களப்பணியாளர் சகோ. பிரபு, மற்றும் பணிக்குழுவினர் செய்து வருகின்றன. திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று பங்குத் தந்தை வில்லியம் சந்தாணம் தெரிவித்தார்.

Wednesday, July 17, 2013

தூத்துக்குடியில் மேயர் சசிகலாபுஷ்பா திடீர் ஆய்வு



தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா தலைமையில் அதிகாரிகள் இன்று மாநகராட்சி பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தூத்துக்குடி ராஜாஜி பூங்கா நீரேற்று நிலையம், சத்திரம் தெரு அம்மா உணவகம், பக்கிள் ஓடை, ரோச் பூங்கா ஆகியவற்றை பார்வையி்ட்டனர். 

பின்னர் மேயர் சசிகலா புஷ்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக முதல்வரின் ஆணையின்படி வரும் மழைகாலத்தை முன்னிட்டு மழை நீர் நகரில் தேங்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பக்கிள் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும், தூத்துக்குடியில் உள்ள அம்மா உணவகங்களில் சுகாதாரமான முறையில் உணவுகள் தயார் செய்யப்படுகின்றனவா? என கண்காணிக்கப்பட்டது. ராஜாஜி நீரேற்று நிலையத்தில் குடிநீரில் குளோரின் ஒழுங்காக கலக்கப்படுகிறதா? மாநராட்சி லாரிகள் முறையாக தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றனவா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தூத்துக்குடி மாநகரத்தை அழகுபடுத்தும் வகையில் நகரின் முக்கிய இடங்களில் ரவுண்டானாக்கள் அமைத்து, அதில் செடிகள் வைத்து பராமரிக்கப்படும். பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தலைவர்கள் சிலைகள் அருகே புல் தோட்டங்கள் அமைக்கப்படும். இது தொடர்பாக சம்பந்தபட்ட இடங்களில் நேரில் சென்று ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.  

ஆய்வின் போது, மாநகரட்சி ஆணையர் மதுமதி, செயற் பொறியாளர் ராஜகோபால், மாநகர் நல அலுவலர் டாக்டர் பிரதீப் விஷ்னுகுமார், இளநிலை பொறியாளர்கள் சரவணன், ஆறுமுகம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஞானசேகரன், மற்றும் கவுன்சிலர்கள் மேயருடன் உடன் சென்றனர். 

Monday, July 8, 2013

சேதுசமுத்திர திட்டத்திற்கு இறுதி ஊர்வலம் நடத்திய மீனவர்கள்: தூத்துக்குடியில் நூதன போராட்டம் - பரபரப்பு




சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தூத்துக்குடி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து சேதுசமுத்திர திட்டம் என்று எழுதப்பட்ட சவப்பெட்டியை கடலில் விடும் போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் சேது சமுத்திர திட்டத்தை கைவிடக் கோரி மீனவர்கள் இன்று (திங்கட்கிழமை) போராட்டம் நடத்துகின்றனர். இதையொட்டி தூத்துக்குடி மாவட்த்தில் உள்ள கடலோர கிராமங்களில் படகுகளில் கறுப்புக் கொடி கட்டி மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும், மீனவர்களது கோரிக்கையை ஏற்று மத்திய அரசு சேது சமுத்திர திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி சேதுசமுத்திர திட்டம் என்று எழுதப்பட்ட சவப்பெட்டிக்கு மாலை அணிவித்து, இறுதி ஊர்வலம் நடத்தி பின்னர் கடலில் விடும் போராட்டமும் நடைபெற்றது. இதில், கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுபாஷ் பர்னாந்து, ஜான்சன், சேவியர் வாஸ் உட்பட பலர் கல்நது கொண்டனர். 

தூத்துக்குடியில் சேது சமுத்திர திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெறும் வேளையில், மீனவர்களின் இந்த போராட்டம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.