Monday, May 11, 2015

ஜெ. விடுதலை: தூத்துக்குடியில் அதிமுகவினர் பாட்டாசு வெடித்து கொண்டாட்டம்

»


சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி குமாரசாமி அறிவித்தார்.  இந்த தீர்ப்பு வெளியானதை அடுத்து, அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். 
தூத்துக்குடியில் பழைய பஸ் நிலையம் அருகே மேயர் அந்தோணி கிரேஸ் தலைமையில் அதிமுகவினர் கொட்டும் மழையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பின்னர் அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில், அதிமுக நிர்வாகிகள் வழக்கறிஞர் யு.எஸ்.சேகர், டாக் ராஜா, ஏபிஆர் கவியரசு, திருச்சிற்றம்பலம், முருகன், குருத்தாய், உதயசூரியன், ரமேஷ்கிருஷ்ணன், ரமேஷ் கண்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர். கொட்டும் மழையில் அவர்கள் பூக்களை தூவியும், இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். இதுபோன்று நகரின் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் ஜெ. விடுதலையை கொண்டாடி வருகின்றனர். தூத்துக்குடி ஒன்றிய விவசாயிகள் அணி செயலளார் விபிஆர் சுரேஷ் மொட்டை அடித்துக்கொண்டார். அவர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து தாடி வளர்த்து வந்தாராம். ஜெயலலிதா விடுதலைக்காக அவர் விரதம் இருந்துவந்த அவர் இன்று தீர்பப்பு வழங்கப்பட்டதையடுத்து அவர் இன்று மொட்டையடித்து தனது விரதத்தை முடித்துக்கொண்டார். 

திமுக சூழ்ச்சி வழக்கில் இருந்து விடுதலை : இறைவன் அளித்த வரம் - ஜெயலலிதா பரபரப்பு அறிக்கை

திமுகவினாரால் சூழ்ச்சி வலைப் பின்னப்பட்டு, அதன் காரணமாக என் மீது போடப்பட்ட வழக்கில் விடுதலையானது  இறைவன் அளித்த வரம் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இன்று (11.5.2015) கர்நாடகா உயர்நீதிமன்றத்தால்  வழங்கப்பட்ட தீர்ப்பு எனக்கு மிகுந்த மன நிறைவை அளிக்கிறது.  என் மீது சுமத்தப்பட்ட அவதூறை நீக்கிய தீர்ப்பு இது.  என் மீது எனது அரசியல் எதிரிகளால் சுமத்தப்பட்ட பழியினைத்  துடைத்திட்ட தீர்ப்பு இது. நான் எந்த தவறும் செய்யாதவர் என்பதை உறுதி செய்த தீர்ப்பு இது.  புடம் போட்ட தங்கமாக நான் மீள இந்தத் தீர்ப்பு வழிவகை செய்துள்ளது
கீழமை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பிற்குப் பிறகு என் மீது மாறாப் பற்றும், அன்பும் கொண்ட தமிழக மக்கள் இறைவனிடம் வேண்டியதற்கு,  இறைவன் அளித்த வரம் இது. இந்த தீர்ப்பு எனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த வெற்றி என்று நான் கருதவில்லை.  நீதி நிலை நாட்டப்பட்டு, தர்மம் வென்றது என்பது தான் இந்த தீர்ப்பு. சூழ்ச்சிகள் என்றைக்குமே தற்காலிகமாக வெற்றி பெறலாம்.  ஆனால், இறுதி வெற்றி என்பது தர்மத்திற்கும், நேர்மைக்கும் தான் கிடைக்கும்.
திமுகவினாரால் சூழ்ச்சி வலைப் பின்னப்பட்டு, அதன் காரணமாக என் மீது  போடப்பட்ட வழக்கில், சதியும் விதியும் சதிராடியதால் இடையிலே நீதி உறங்கி விட்டது.  இன்றைய தீர்ப்பு நீதியே என்றும் வெல்லும் என்பதை பறைசாற்றுகிறது. என்னையும், அஇஅதிமுகவையும் நேரடியாக வெல்ல முடியாது என்ற காரணத்தால் அரசியல் எதிரிகள் இறுதி வரை தங்கள் சூழ்ச்சிகளால் என்னையும், புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல், இதயதெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களால் துவக்கப்பட்ட மாபெரும் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தையும் அழித்து விடலாம் என்ற  காழ்ப்புணர்வை இன்றுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.நான் குற்றமற்றவர் என்பதில் எள் முனையளவும் நம்பிக்கை குலையாமல் எனக்காக பிரார்த்தனைகள் மேற்கொண்ட என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தாய்மார்களுக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான கழக உடன்பிறப்புகளுக்கும், அனைத்து தமிழக மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கீழமை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக மன வேதனை அடைந்த 233 கழக உடன்பிறப்புகள் எனக்காக தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்கள் என்பது என்றென்றும் எனக்கு வேதனை அளிக்கக்கூடியதாகும்.  நேற்று (10.5.2015) கூட  நான்கு கழக உடன்பிறப்புகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்கள்.  இன்னும் சற்று நிதானத்தைக் கடைபிடித்திருந்தால் அவர்களும் தமிழக மக்களின் இந்த மகிழ்ச்சியை இன்று  கொண்டாடி இருக்கலாம். தமிழக மக்கள் எல்லோரும் எல்லாமும் பெற  வேண்டும் என்பதே எப்போதும் எனது அவா ஆகும்.  தமிழக மக்களின் நலனே என் நலன் என்று நான் என்றென்றும் தமிழக மக்களுக்காகவே உழைத்திடுவேன். என்று அந்த அறிக்கையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.   

Tuesday, March 10, 2015

தூத்துகுடியில் காமராஜ் அகாடமி துவக்கவிழா

 


 




தூத்துக்குடி பக்கிள்புரம் ஜனதா பள்ளியில் காமராஜ் அகாடமியை தமிழக மதசார்பற்ற ஜனதா தள மாநில துணைத்தலைவர் வக்கீல்.சொக்கலிங்கம் தொடங்கிவைத்தார்.



மதசார்பற்ற ஜனதா தள மாநகர செயலாளர் கோமதி நாயகம் வரவேற்றார். அரசு வேலைக்கான பயிற்சி மற்றும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் எழிலன், ரகு,ராஜதுரை, சரவணன், ராமநாதன், பேராசிரியை வாசுகி ஆகியோர் மாணவ,மாணவிகளுக்கு பயிற்சி வகுப்ப்புகள் எடுத்தனர். இந்த அகடமியின் இயக்குநர் புவனேஸ்வரி வெங்கட் நன்றி கூறினார். 



நிகழ்ச்சியில் ஜனதா தள நிர்வாகிகள் வேல்முருகன்,சாஸ்தாவூ, ராஜேந்திரன் மற்றும் மாணவ,மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். 

Monday, March 9, 2015

இளம்பெண்ணை ஏமாற்றிய காவல் நிலைய எழுத்தர்.

 

தல் திருமணத்தினை விவாகரத்து செய்துவிட்டதாக கூறி, 2வது திருமணம் செய்த காவல் நிலைய எழுத்தர் மீது நடவடி்ககை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.



தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வள்ளிவிளை கிராமம், வாரியார் தெருவைச் சேர்ந்தர் பமீலா. இவர் தனது கைக்குழந்தையுடன் வந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: எனது கனவர் இன்பராஜ், சூரங்குடி காவல் நிலையத்தில் நிலைய எழுத்தராக உள்ளார். அவர் முதல் திருமணம் முடிந்து விவாகரத்து பெற்றுவிட்டதாக கூறி என்னை 2வதாக திருமணம் செய்து கொண்டார். 



கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனக்கு 6 மாத கைக்குழந்தை உள்ளது.  தனக்கு நெல்லைக்கு இடமாற்றம் கிடைத்துவிடும், அங்கு புதுவீடு பார்த்து குடித்தனம் நடத்தலாம் என்று கூறி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர் என்னை ஏமாற்றி வந்தார். இந்நிலையில், அவர் ஏற்கனவே திருமணம் செய்த பொன் சரண்யாவுடன் ஸ்ரீவைகுண்டத்தில் குடும்பம் நடத்தி வருவது தெரியவந்தது. 



விவாகரத்து ஆகிவிட்டதாக கூறி, அவர் என்னை ஏமாற்றி, எனது வாழ்க்கையை சீரழித்து விட்டார். இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்திலும், தூத்துக்குடி மாவட்ட எஸ்பியி்டம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிததுள்ளார். 

Sunday, March 8, 2015

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் உலக மகளிர் தின கொண்டாட்டம்



ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் உலக மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது.

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் சகி மகளிர் மேம்பாட்டுத்திட்ட சுய உதவிக்குழு மகளிரும், ஸ்டெர்லைட் மகளிர் ஊழியர்கள் குழுவான டியு- பெமினா விப்ஜியார் 2015 இணைந்து உலக மகளிர் தின விழா கொண்டாட்டம் தூத்துக்குடி ஏ.வி.எம். கமலவேல் மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு ஸ்டெர்லைட் முதனமை செயல் அலுவலர் ராம்நாத் முன்னிலை வகித்தார். கவிஞர் முனைவர் தமிழச்சி தங்கப்பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில், வழக்கறிஞர் சொர்ணலதா, வேதாந்தா குழும தகவல் தொடர்பு மற்றும் சமுதாய வளர்ச்சி துறை தலைவர் ரோமா பல்வானி வாழ்த்துரை வழங்கினர். ஸ்டெர்லைட் மனித வளர்ச்சி துறை தலைவர் சுரேஷ் போஸ், சமூக தொடர்புத்துறை ரமேஷ், துளசி சமூக அறக்கட்டளை தலைவர் தனலெட்சுமி, தாயகம் ஜெயகனி, ஏபிஎஸ். பவுண்டேசன் டென்சி, பெல் கல்விக்கழகம் பியூலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மகளிர்தின விழாவில், 8சுய உதவிக்குழுவினருக்கும், 8மகளிர் தொழில் முனைவோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. முன்னதாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற 120 மகளிர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுய உதவிக்குழுவைச் சேர்ந்த மகளிர்கள் கலந்து கொண்டனர். மேலும், விழா வளாகத்தில் வளரிளம் பெண்களும், தாய்மார்களும் பயன்பெறும் வகையில் நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் இலவச மருத்துவ சேவை அளிக்கப்பட்டது. இந்த முகாமில் ஏராளமானோர் பயன்பெற்றனர்.


ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் கடந்த 2005ம் ஆண்டு முதல் ஸ்டெர்லைட் மகளிர் மேம்பாட்டு திட்டத்தை தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் அப்பகுதி பெண்களின் சமூக பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மகளிர் குழுக்கள் அமைக்கப்பட்டு தொழிற்பயிற்சியும் அமைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 1400 குழுக்கள் அமைக்கப்பட்டு 19ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக மாறியது மட்டுமின்றி, தொழில் முனைவோர்களாகவும் உருவாக்கப்பட்டுள்ளனர் என்று விழாவில் ஸ்டெர்லைட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Saturday, January 3, 2015

முத்துநகர் எக்ஸ்பிரஸ் மின்சார ரயில் இயக்கம்

 


 





தூத்துக்குடி–சென்னை இடையே இயக்கப்படும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் மின்சார ரயில் தூத்துக்குடி வந்தது.



விருதுநகர் – தூத்துக்குடி, வாஞ்சி மணியாச்சி – நெல்லை இடையேயான ரயில் பாதை மின்மயமாக்கும் பணி நடந்து முடிந்தது. இந்த பணிகள் முடிக்கப்பட்டு சோதனைகள் நடந்தன. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மின்சார பாதைகள் மற்றும் ரயிலின் வேகம், துணை மின்நிலையங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் அனைத்து அம்சங்களும் திருப்திகரமாக இருந்தது. இதனால் மின்மயமாக்கப்பட்ட பாதையில் மின்சார ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டது.



கடந்த மாதம் 29ம் தேதி மின்சாரம் மூலம் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தேதியில் பல்வேறு தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக இயக்கபட முடியவில்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில், நேற்று இரவு முத்துநகர் எக்ஸ்பிரஸ் மின்சார ரயிலாக சென்னையில் இருந்து பயணிகளுடன் புறப்பட்டு இன்று காலை தூத்துக்குடி வந்தடைந்தது.



தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் மின்சார ரயிலாக மாறியது குறித்து ரயில் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் சூப்பர் பாஸ்ட் ரயிலாக உள்ள முத்துநகர் எக்ஸ்பிரஸ் பயண நேரத்தை குறைக்கும் வகையில் வேகம் அதிகரிக்கப்படுமா என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.