ஆன்லைன் மூலம் ஆர்டர் கொடுத்து பொருட்கள்
வாங்கும் பழக்கம் மக்களிடையே ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய
காரணம், தாங்கள் விரும்பும் பொருளை ஆன்லைனில் பார்த்து அதை ஆர்டர் செய்தவுடன்
வீட்டிற்கே வந்து கொடுக்கிறார்கள் என்பதால் தான். இந்த ஆன்லைன் வர்த்தகம் இன்னொரு
பக்கம் வேலை வாய்ப்புகளை அதிகளவில் தருகிறது என்று ஆய்வுகள் மூலம்
தெரியவந்துள்ளது.
தூத்துக்குடியில் விண்வெளி கல்வி பயின்ற இளம்
பெண் ஒருவர் வீட்டிலிருந்தே பல்வேறு வகையான பொருட்களை மக்கள் விரும்பும் வண்ணம்
தயார் செய்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்து அசத்தி வருகிறார். வித விதமான கேக்
வகைகள், பெண்களுக்கான நவநாகரீக நகைகள், குழந்தைகளுக்கான டையபர் கேக் உள்ளிட்டவைகளை
புதுமையாகவும் நவீன முறைகளில் வடிவமைத்து செய்து தருகிறார்.
தூத்துக்குடி தொழிலதிபர் கணபதி சந்தாணம். இவர்
டூவிபுரத்தில் வசித்து வருகிறார். இவருடைய இளைய மகள் சிவரஞ்சனி விண்வெளி கல்வி
முடித்து விட்டு வீட்டில் தாயாருக்கு துணையாக இருந்து வருகிறார். சமையல் துறையில்
ஆர்வமுள்ள சிவரஞ்சனிக்கு புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்பது சிறு வயது முதலே
இருந்துள்ளது. உடன் படித்த சக மாணவிகளின் ஊக்கத்தின் காரனமாக கேக் தயார் செய்யும்
முறையினை கற்றுள்ளார்.
தற்போதுள்ள கால கட்டத்திற்கு தகுந்தவாறு
கம்யூட்டர் மூலம் வடிவமைத்து வீட்டில் சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே
வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப கேக் தயார் செய்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்து
வருகிறார். விளம்பரம் இல்லாமல் பேஸ்புக் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் செய்த
விற்பனை தற்போது, மும்பை, பெங்களூர், ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும்
கொரியர் மூலம் அனுப்பி தனது கேக் வியாபாரத்தை பெருக்கியுள்ளார். இவர் தயார் செய்த
கேக் மற்றும் வடிவமைப்பை கண்ட பெண்கள் தாங்களுக்கும் பயிற்சி தருமாறு கேட்டுள்ளனர்.
இதனையடுத்து மற்ற பெண்களுக்கும் வகுப்புகள் நடத்தி வருகிறார்.
குறிப்பாக பிறந்த குழந்தைகளை பார்க்கச் செல்லும்
போது அவர்களுக்கு கேக் வழங்க முடியாத குறையை நிவர்த்தி செய்யும் வகையில், பாம்பினோ
டயபர் கேக் என்ற பெயரில், பூத்துண்டு, டயபர், பூட்டீஸ், வாஷ் கிளாத்ஸ், ஹூட்டடு
டவல்ஸ், ஷாக்ஸ் உள்ளிட்ட பொருட்களை கொண்டு கேக் வடிவத்தில் மிக அழகாக தயார் செய்து
கொடுக்கிறார்.
இதுகுறித்து சிவரஞ்சனி கூறுகையில், ஆரம்பத்தில்
புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்பது சிறு வயது முதலே எனக்கு ஆசை. குறிப்பாக
வீட்டிலுள்ள பெரியவர்கள் சமையல் செய்யும்போது நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று
ஆர்வத்துடன் இருந்தேன். என்னுடன் படித்த தோழிகள் மூலம் கேக் தயார் செய்வது குறித்து
கற்றுக்கொண்டேன். கேக் தயார் செய்வதில் பேக்கரி பொருட்களை தவிர்த்து வீட்டு
சமையலுக்கு பயன்படுத்தப்படும் சீனி, மைதா, வெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை கொண்டே
தயார் செய்கிறேன்.
கடைகளில் விற்கப்படும் கேக் வகைகள் ஒரே மாதிரியாக
இருக்கும். நான் செய்யும் கேக் வகைகள் வாடிக்கையாளர்கள் விரும்பும் டிசைன்களில்
செய்து தருகிறேன். இதற்காக பிரத்யேகமாக என்னுடை வடிவமைப்பில் உருவான
முகநூல் இணையதளத்தில் https://www.facebook.com/amatocooking மாடல்கள்
வைத்துள்ளேன். அதைப்பார்த்து வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்கின்றனர்.
மேலும், அவர்கள் விரும்பும் டிசைன்களிலும்,
பொருளாதார வசதிக்கேற்ப செய்து கொடுக்கிறேன். கடைகளில் விற்கப்படும் கேக் வகைகளை
விட என்னுடைய தயாரிப்பு சற்று விலை அதிகமாக இருக்கும். அதற்கான காரணம், துருக்கி,
அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளிலிலுருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு சில உணவு
பொருட்கள் கேக் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. தயார் செய்யப்படும் கேக் வகைகள்
வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான முறையில் பேக்கிங் செய்யப்பட்டு கொரியர் மூலம்
அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பிரவுனி,
ஜிஞ்சர், பிரட் குக்கி, ரம் கலந்த புரூட் கேக் உள்ளிட்ட புதியவகை
அறிமுகப்படுத்தப்பட உள்ளது. திருநெல்வேலி அல்வாவை பயன்படுத்தி புதிய வகையான
கேக்குகள் தயார் செய்யப்படும் என்றார் சிவரஞ்சனி.
No comments:
Post a Comment